2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் திட்டம் என்ன...?


2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் திட்டம் என்ன...?
x
தினத்தந்தி 31 July 2021 8:01 AM GMT (Updated: 31 July 2021 8:01 AM GMT)

காங்கிரசும் மூன்றாவது அணி கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு போட்டியைக் கொடுக்க முடியும்.

புதுடெல்லி

பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் சிறந்த அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும்  அறியப்படுகிறார். 2011ஆம் ஆண்டு முதல் பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை நிறுவனம் ஐபேக்  ஒன்பது தேர்தல்களில்  வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பிரசார ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமர் வேட்பாளர்

2012-இல் 4-ஆவது முறையாக குஜராத் முதல்வராகவும், 2014-இல் பிரதமராகவும் மோடிக்கு வியூகம் வகுத்தார், 2017-இல் உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கும், 2019-இல் ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2020-இல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், 2021-இல் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வியூகம் அமைத்துக் கொடுத்தார். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே இவரது வியூகம் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை.

சமீபத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற எதிர்கட்சி தலைவர்களைச் சந்தித்ததன் மூலம் மீண்டும் அவர் பேசப்படுகிறார். நரேந்திர மோடியின் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அவர் ஒன்றிணைத்து வருவதகாவும், காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிரசாந்த் கிஷோர் சமீபத்திய சந்திப்புகளும்  அவரது நடவடிக்கைகள் அவர் பிரதமர் மோடிக்கு எதிராக  வலுவான வேட்பாளரை தேர்ந்து எடுக்கவும், காங்கிரசை வலுப்படுத்த திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி

டெல்லியில் 5 நாட்கள் முகாமிட்டு மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்தார்.இந்த பயணத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா, அபிஷேக் மனு சிங்கி, தி.மு.க. கனிமொழி. உள்ளிட்டோரையும் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மம்தா டெல்லியில் தீவிரமாக சுற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு நபரும் பின்னணியில் இயங்கிக்கொண்டிருந்தார் - கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் - மம்தாவுக்கு  ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும். மம்தாவுடன் அவரது மருமகனும், தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் சென்றார், இது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்.

டெல்லி பயணத்தின் போது, பிரசாந்த் கிஷோர் தினமும் மதிய உணவிற்கு மம்தா பானர்ஜியை  சந்தித்தார்.  நான்கு நாட்களும், கிஷோர் மம்தாவுடன் அமர்ந்து இந்த மதிய உணவு  வேளையின் போது  அன்றைய நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்தார்.

மம்தா டெல்லியில் புதிதாக அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவர் ஏழு முறை எம்.பி யாக இருந்தவர்.  மூன்றாவது முறையாக முதல் மந்திரியாகை உள்ளார், அவர் நரசிம்ம ராவ் மந்திரி சபையில் மத்திய மந்திரியாக  இருந்தார். எனவே, அவர் டெல்லி அரசியலைப் புரிந்துகொண்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தாபானர்ஜி 

நான் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் தலைவராக இருக்க விரும்பவில்லை. ஒரு சாதாரணத் தொண்டராகத் தெருவில் இருக்கும் சாமானியனாக இருந்து அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் உதவவே விரும்புகிறேன். 

பா.ஜ.க-வை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். அதை நோக்கி மட்டுமே என்னுடைய அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும் என கூறினார்.

காங்கிரஸ் சரிவு

1980களில் மத்தியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மற்றும் வெற்றி பெறும் தொகுதிகளில் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

2019-ம் ஆண்டு தேர்தலில் 20 சதவீத வாக்குகளுடன் 52 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அக்கட்சிக்கும் 100 உறுப்பினர்கள் உள்ளார். பல மாநிலங்களில் 880 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது.

மத்தியில் தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சியை இழந்ததுடன், பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து நிற்கும் காங்கிரசுக்கு எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வலிமையாக்கும் திட்டம்

காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் ஜூலை 13 ஆம் தேதி   ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தபோது திட்டம் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது.  

காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுவதற்கும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு தயாராவதற்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த செயல் திட்ட முன்வரைவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. 

அதிகாரமிக்க குழு

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி குறித்து விவாதிக்க செயற்குழு உறுப்பினர்கள் குழுக்களாக கூடி விவாதிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்க ஒரு அதிகாரமிக்க  குழுவை அமைக்கவும், மாநில மற்றும் மாவட்ட குழுக்களை வலுவாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் கிஷோர் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பல முறை சந்தித்து பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ஏகே அந்தோணி ஆகியோர் கூட்டங்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது. 

முதல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ப.சிதம்பரம், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத், கமல்நாத், ரகுவீர் மீனா மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாவது கூட்டத்தில் பிரியங்கா, திக்விஜயா சிங், தாரிக் அன்வர் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலவாரியாக பலம்

கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களிலின்  எதிர்க்கட்சியின் ஒற்றுமைக்கு காங்கிரசும் ஒரு முக்கிய காரணியாகும், அங்கு முக்கிய எதிர்க்கட்சி தூணாக காங்கிரஸ் உள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது பா.ஜ.க. தனித்து 37 சதவீத  வாக்குகளையும், கூட்டணியாக 45சதவீத  வாக்குகளையும், பெற்றிருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தனித்து 19 சதவீத வாக்குகளையும் கூட்டணியாக 25 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. 20 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது.

தேர்தலுக்குப் பிறகு சிரோமணி அகாலிதளம், சிவசேனா போன்ற கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறின. அதேபோல பா.ஜ.க. தனித்து 303 இடங்களையும், காங்கிரஸ் தனித்து 52 இடங்களையும் பெற்றன. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே நேரடியாக சுமார் 171 தொகுதிகளில் போட்டி உள்ளது.

பீகாரிலுள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி மிக முக்கியமாக உள்ளது. அங்கு யாதவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்று திரண்டால் மட்டுமே பா.ஜ.க.ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு போட்டியை கொடுக்க முடியும்..

மராட்டியத்தில்  48 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனாஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மராத்தா, கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை முழுமையாக பெற்றால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலம் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பழங்குடியினர், இஸ்லாமியர் வாக்குகளை மொத்தமாக பெற்றால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு போட்டி கொடுக்க முடியும்.

இதுபோன்று 142 தொகுதிகளில் காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. காங்கிரசும் மூன்றாவது அணி கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு போட்டியைக் கொடுக்க முடியும்.

யார் பிரதமர் வேட்பாளர்

மூன்றாவது அணி கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ராகுல் காந்தி மூன்றாவது அணி கட்சிகளில் யாராவது ஒருவரை தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்தமுறை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தபோது அடுத்தநாளே அகிலேஷ் யாதவ் மறுத்தார். இந்த முறை ராகுல் காந்தியை, அகிலேஷ் யாதவ் முன்மொழிந்தால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலையில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ்தான் எனும் அந்தஸ்து மட்டும் எஞ்சியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக கை காட்டினால் அதுவும் போய்விடும்.

ஏழு நாட்களுக்கு ஏழு பிரதமர் 

மூன்றாவது கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமையை கொண்டுவருவது கடினம். காரணம், ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல் மந்திரி  சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல் மந்திரி  நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போன்ற தலைவர்கள் காங்கிரஸ்-பா.ஜ.க ஆகியவற்றை சம எதிரியாகவே கருதுவதால் அவர்களை மோடிக்கு எதிராக அணிதிரட்டுவது கொஞ்சம் கடினம்.

அதேபோன்று பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. கேரளத்தில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. மேலும், கேரளத்தைத் தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கினாலும் கூட மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக பினராயி விஜயன் ஒப்புக்கொள்ள மாட்டார். 

இவ்வாறாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மையும் ஏழு நாட்களுக்கு ஏழு பிரதமர் என கேலி செய்யும் அளவுக்கு செயல் திட்டமும் 

வடமாநிலங்களில் மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை ஒப்பிட்டால் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவைத் தேர்தலில் மோடி தலைமைக்கு கூடுதலாக 10 முதல் 15 சதவீத வாக்குகள் கிடைத்து வருவதை காணலாம். குறிப்பாக, 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அரியானாவில் மக்களவைத் தேர்தலில் 58 சதவீதமும், சட்டமன்ற தேர்தலில் 36.5 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 58 சதவீதமும், சட்டமன்ற தேர்தலில் 41 சதவீதமும், ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் 58.5 சதவீதமும், சட்டமன்ற தேர்தலில் 38.8 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 49.98 சதவீதமும், சட்டமன்ற தேர்தலில் 39.6 சதவீதமும், பீகாரில் மக்களவைத் தேர்தலில் 53.2 சதவீதமும்,சட்டமன்ற  40.5 சதவீதமும் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளன.

Next Story