சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். பின்பு அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 298 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மும்பையில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஒரு குழுவாக வந்த சென்னையை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் துபாயில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து உள்நாட்டு பயணியாக சென்னை வந்தது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 860 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சேதனையில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 8 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story