10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கறம்பக்குடி அருகே துணை தேர்விலும் தோல்வி அடைந்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி:
துணை தேர்வில் தோல்வி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் சேகர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு சிவனேசன், ஜெனார்தன் என்ற 2 மகன்களும், ஜெனிதா (வயது 15) என்ற மகளும் உள்ளனர். இதில் ஜெனிதா கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதியில் உள்ள அவரது பெரியம்மா சீரங்கம் என்பவர் வீட்டில் தங்கி கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெனிதா கணக்கு, சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதையடுத்து துணை தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால் இந்த தேர்விலும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. துணை தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டே 11-ம் வகுப்பில் சேர்ந்து விடலாம் என ஆர்வத்துடன் இருந்த ஜெனிதாவிற்கு தேர்வு முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அவர் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
மாணவி தற்கொலை
இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டுக்கொண்டார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெனிதாவை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ஜெனிதாவின் தாய் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் அங்கு சென்று மாணவி ஜெனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். துணை தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






