ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டி; வார்டு உறுப்பினர்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வு


ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டி;  வார்டு உறுப்பினர்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வு
x

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகிறார்கள். வார்டு ஊறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அரியலூர்

வேட்பு மனுக்கள் வாபஸ்

அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதியுடன் முடிவடைந்தது.

28-ந்தேதி அந்த மனுக்களின் மீது ஆய்வு செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று அரியலூா் ஒன்றியத்துக்குட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 5 பெண்களில், 3 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்று கொண்டனர்.

சின்னங்கள் ஒதுக்கீடு

இதேபோல் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 2 பெண்களில், ஒருவர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெற்று கொண்டார். செந்துறை ஒன்றியம், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 2 பேரில், ஒருவர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெற்றுகொண்டார். அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனால் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பெண்களும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு பெண் உள்பட 2 பேரும், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பெண்களும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் தேர்தல் பிரசாரம் தொடங்கியது.

வாக்குப்பதிவு

திருமானூர் ஒன்றியம், கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தமிழ்ச்செல்வி என்பவரும், செந்துறை ஒன்றியம், நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஷ்ணு பிரியா என்பவரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 2 பெண்களில், ஒருவர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெற்றதால், மலர்கொடி என்பவரும், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 2 பேரில், ஒருவர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெற்றதால், ராமச்சந்திரன் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. மற்ற பகுதிகளில் 9-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.


Next Story