குடோனில் பதுக்கி இருந்த 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


குடோனில் பதுக்கி இருந்த 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

திருச்சி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி

திருச்சி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த புலிவலம் அருகே சிறுகுடி கிராமத்தில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சிறுகுடிக்கு சென்றனர்.

பின்னர் அந்த கிராமத்தில் இருந்து புலிவலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு குடோனில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும், குடோனில் இருந்தவர் தப்பி ஓடிவிட்டார்.

16 டன் ரேஷன் அரிசி

இதைத்தொடர்ந்து நடத்திய சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 10 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியும், மேலும் 305 மூட்டைகளில் 15 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர் திருச்சி தென்னூரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா என தெரியவந்தது. மேலும், அவர் ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக்கி நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாபு என்கிற சாதிக்பாட்ஷாவை தேடி வருகின்றனர். மேலும் பதுக்கி வைத்திருந்த அரிசியும் கைப்பற்றப்பட்டது.


Next Story