தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2017 7:06 AM GMT (Updated: 11 Jan 2017 7:06 AM GMT)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் இவ்வாறு முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

சென்னை

தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.  இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் பலஅரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறன்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.  2006-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி நாகராஜ் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, இராமநாதபுரம் மாவட்டத்தில் மகா கும்பாபிஷேக திருவிழாவினை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் ஒன்றை நடத்த அனுமதிக்குமாறு முனியசாமித் தேவர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆகியவற்றிற்கு தடைவிதித்து 29.3.2006 அன்று உத்தரவு பிறப்பித்தது.  இதனை எதிர்த்து, 2006 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.  இந்த அமர்வு நீதிமன்றம் 9.3.2007 அன்று பிறப்பித்த உத்தரவில் கிராமப் புற விளையாட்டின் மீது முழுமையாக தடை விதித்தது தவறு என்றும், இதனை நெறிமுறைப்படுத்தி நடத்தலாம் என்றும் ஆணையிட்டது.  இந்த தீர்ப்பினை எதிர்த்து, இந்திய பிராணிகள் நல வாரியத்தால் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்புக் கால வழக்கு 9.7.2007 அன்று தாக்கல் செய்யப்பட்டது.  உச்சநீதிமன்றம்  27.7.2007 அன்று தடையாணை ஒன்றை பிறப்பித்தது.  இந்த தடையினை நீக்கக் கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடத்திட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

உச்சநீதிமன்றம் தனது 15.1.2008 நாளிட்ட ஆணையில் ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிர்க்க வேண்டும் என்றும் பிராணிகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்  என்றும் தெரிவித்தது.  

இதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு  ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம்  2009 என்ற ஒரு சட்டம்  இயற்றப்பட்டது.25.11.2010  அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையில், மாவட்ட ஆட்சியர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளைகள், இந்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,  அதே போன்று பிராணிகள் நல வாரியம் ஜல¦லிக்கட்டு நிகழ்வுகளை கண்காணிக்க அதன் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும்,  கால்நடை மருத்துவர்கள் குழு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நிகழ்வுகளில் பங்குபெறும் காளைகளை பரிசோதித்து சான்று அளிப்பதுடன், காயம்படும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றும்,   ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, விபத்து அல்லது காயன் அடைகின்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் சிறிய நிகழ்வுகளுக்கு 2 லட்சம் ரூபாயும்,  பெரிய நிகழ்வுகளுக்கு 5 லட்சம் ரூபாயும்  வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும்  விரிவான நெறிமுறை வழங்கப்பட்டது.  இவ்வாணையினை எதிர்த்து பீட்டா என்ற அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தது.  உச்சநீதிமன்றம் இவ்வழக்கையும் மூலவழக்குடன் சேர்த்து விசாரிக்க ஆணையிட்டது.  

அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு,  ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது.  இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜனவரி 2012-ல்  திருமதி. ராதாராஜன் மற்றும் பிராணிகள் நல வாரியத்தினர்,  காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அம்மனுவினை சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளை அமர்வு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கூடுதல் பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.   10.1.2013-ல்  சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளையிலிருந்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது.        உயர்நீதிமன்ற ஆணைகளுக்கு ஏற்ப 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உச்சநீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று  இறுதி உத்தரவை பிறப்பித்தது.  அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது.  மேலும் தமிழ்நாடு  ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால்  தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து  19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால்  மறு ஆய்வு மனு (சுநஎநைற ஞநவவைவீடிஸீ) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு  தொடர்ந்து வலியுறுத்தியது.  7.8.2015 அன்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்கள். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிபடுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.  புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர்.  எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 22.12.2015 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.  அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.   அவர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.  இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது.  அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது.  எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைக் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்கள்.  அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்களாலும்,  தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த போதும், மத்திய அரசு இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் கொண்டு வரவில்லை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்தேன்.  அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன்.  9.1.2017 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும்  வகையில்  7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என நான் உறுதியுடன் நம்புகிறேன்.

தி.மு.க.வின் செயல் தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்கள் 3.1.2017 அன்று அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென ஆர்ப்பாட்டம் ஒன்றை தலைமை ஏற்று நடத்தினார்.  ஜல்லிக்கட்டு தடைபட்டதற்கு அஇஅதிமுக அரசு தான் காரணம் என ஒரு பொய்க் குற்றச்சாட்டை அப்போது அவர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததற்கு முக்கியமான காரணமே தி.மு.க.அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2011-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கை தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாய் இருந்துவிட்டு இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்து போக மாட்டார்கள்.  ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற சொலவடையைத் தான் இவரது நடவடிக்கை நினைவூட்டுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு காரணமே 2011-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தான்.  அதற்கு உறுதுணையாய் இருந்த தி.மு.க. எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், அந்த பாவத்தை தொலைக்க முடியாது.  

அந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது மேலும், 2014-ஆம் ஆண்டு  உச்சநீதிமன்றம் வகுத்த நடைமுறைகளுக்கு எதிராக  ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது என  ஒரு  பொய்யை கூறியுள்ளார்.  இது ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து தமிழக மக்களுக்கு இழைத்திடும் துரோகம் ஆகும்.  உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகள் தொடுத்த வழக்கில், காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என உண்மைக்கு மாறாக தெரிவித்துள்ளனர் என்பதை ஆதாரங்களோடு தமிழ்நாடு அரசு தனது எதிர் உறுதி ஆவணத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளது.  ஆனால், இதற்கு மாறுபட்ட கருத்தை, அதாவது தமிழக மக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம், அக்கறை, தி.மு.க.விற்கு கிஞ்சித்தும் இல்லை என்பதையே இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். வழக்கம் போலவே, அரசியல் ஆதாயத்திற்காக  தமிழக நலனை விட்டுக் கொடுக்க தி.மு.க. முற்பட்டுள்ளது.  

மு.க.ஸ்டாலின், முன்னாள் உயர்நீதிமன்ற  நீதியரசர் மார்கண்டேய கட்ஜு அவர்கள், மாநில அரசே அவசரச் சட்டத்தை கொண்டு வரலாம் என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் என்றும்,  அது சரியான கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.  நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக எந்த ஒரு சட்டத்தையும் தமிழ்நாடு அரசால் இயற்ற இயலாது.  எனவே தான், 2009-ஆம் ஆண்டு முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது.  நீதியரசர் மார்கண்டேய கட்ஜு அவர்கள் சொல்லியுள்ள வேறு பல கருத்துகளை இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசராக தான் 2004-05 ஆண்டுகளில் இருந்த போது, அப்போது முதலமைச்சராக இருந்த  அவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர் பணி இடங்களை நிரப்புவதில் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்றும், நீதிப் பணிகளிலும் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்றும், ஆனால் தகுதியற்ற நபர்களை பரிந்துரைக்க தி.மு.க. தனக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்தது என்றும் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.  
மேலும், இதே நீதியரசர் மார்கண்டேய கட்ஜு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த போது தி.மு.க. ஆட்சியின் போது மதுரையில் கிரானைட் கற்கள் கொள்ளை விவகாரம் தொடர்பாக ‘தின பூமி’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் பற்றி அப்போதைய தி.மு.கஅரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார். நீதியரசரின் இந்த கருத்துகளுக்கெல்லாம் விளக்கமளிக்க ஸ்டாலின் முன் வருவாரா?  

தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் அவர்கள்.  காவிரி நதிநீர் பிரச்சனை  என்றாலும், முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதைப் பாதுகாத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  அவர் வழியில் செல்லும் நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்.  இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.  தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story