வேளாண்மை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேளாண்மை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான திட்டங்களை அடுத்த ஓராண்டில் செயல்படுத்தவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. விவசாயிகள் நலனை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உழவுத்தொழில் லாபம் தராத ஒன்றாக இருப்பதற்கு முக்கிய காரணம் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது தான். விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் போதெல்லாம் இந்த விஷயத்தை மறந்து விடுவதால் தான் விவசாயிகள் தற்கொலையை இன்று வரை நம்மால் தடுக்க முடியவில்லை. வேளாண் விளைப்பொருட்களுக்கு கொள்முதல் விலையை நிர்ணயிப்பது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, தேசிய வேளாண்மை பொருளாதாரம் மற்றும் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சந்த் குழு ஆகியவை முறையே மன்மோகன்சிங் அரசு, நரேந்திரமோடி அரசு ஆகியவற்றிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.
இரண்டுமே விளைப்பொருட்களின் உற்பத்தி செலவுடன் குறைந்தபட்சம் 50 சதவீதம் லாபம் சேர்த்து வழங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்துகின்றன. ஆனால், இந்த 2 அறிக்கைகளையும் அரசு செயல்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவில் பல மாநிலங்களில் மானாவாரி சாகுபடி தான் அதிக பரப்பளவில் நடைபெறுகிறது. பாசன வசதி சொல்லிக்கொள்ளும்படி விரிவுபடுத்தப்படவில்லை. தமிழகத்தின் பாசன கட்டமைப்பு கவலையளிக்கும் வகையில் தான் உள்ளது.
இவற்றையெல்லாம் சரி செய்யாமல் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்துவது ஓட்டை குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு இணையான பயனையே கொடுக்கும். எனவே, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேளாண்மை சார்ந்த அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டத்தை தயாரித்து செயல்படுத்தவேண்டும். இதற்கு வசதியாக மத்தியிலும், மாநிலத்திலும் வேளாண்மை துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதுடன், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவையும் அரசு அமைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






