சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு; போலீசாருக்கு புதிய சலுகைகள்


சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு; போலீசாருக்கு புதிய சலுகைகள்
x
தினத்தந்தி 9 July 2017 12:30 AM GMT (Updated: 8 July 2017 9:17 PM GMT)

சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை விவாதத்தை தொடர்ந்து, துறை சார்ந்த அறிவிப்புகளை முதல்–அமைச்சர் வெளியிட்டார்.

சென்னை,

காவல்துறை சார்பில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 45 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:–

கோவை மாவட்டம், தடாகத்தில் புதிய காவல் நிலையம் 2.64 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் நிலையத்தை ஊரகம் மற்றும் நகரம் என இரண்டாக பிரித்து ஆத்தூர் நகர காவல் நிலையம், 2.57 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு காவல் துறையினருக்காக சைபர் அரங்கம் ஒன்று 3.71 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்க மின் ரசீது முறை, 6.42 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.

வீரதீர செயலுக்காக, தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்படி 300 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக 9 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

சென்னை பெருநகர காவல் துறைக்குட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில், தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடி, 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை பெருநகரம், ஐஸ் அவுசிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், கானாத்தூர் காவல் நிலையம், பட்டாபிராம் காவல் நிலையம் உள்ளிட்ட 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் 11.37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

விழுப்புரம், ஈரோடு, காஞ்சீபுரம், மதுரை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள கியூ-பிரிவுகளுக்கும் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கும், அலுவலக கட்டிடங்கள், 7.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். கலவரத்தின்போது, காவல் ஆளினர்களின் பாதுகாப்பிற்காக பாலிகார்பனேட் லத்திகள், பாலிகார்பனேட் தடுப்பு கருவிகள், பைபர் தலைக்கவசம் மற்றும் உடற்பாதுகாப்பு கவசம் போன்ற 10,000 பாதுகாப்பு சாதனங்கள், 5 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

100 காவல் நிலையங்களில் கண்காணிப்பிற்காக, இணைய வசதியுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக் காட்சி சாதனங்கள், 2.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். காவல் துறையினருக்கான வாகனம்-குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு செய்தல் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக, 2 மீட்பு வேன்கள், 54.40 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் இரண்டு, 35 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். பைபர் ஆப்டிக் கண்காணிப்பு சாதனம் ஒன்று, 25 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். கடித வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் ஆறு, 1.20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். மெட்டாலிக் புரோடர் கருவிகள் பத்து, 24 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்படும். அதிரடிப்படை வீரர்களுக்கென குண்டு துளைக்காத 360 கோண வடிவிலான 2 பொதியுறைகள், 19 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் சாதனங்களைப் பழுதுபார்த்து சரி செய்வதற்கான உபகரண தொகுப்பு இரண்டு, 26 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

நடமாடும் மோர்ச்சாஸ் கருவிகள் மூன்று, 18.60 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். திருச்சி மாவட்டத்தில், எண்ம முறையிலான தகவல் தொடர்பு முறை, 11.60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ம முறையிலான தகவல் தொடர்பு முறை, 10.80 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். திருநெல்வேலி மாநகரில் எண்ம முறையிலான தொலைத்தகவல் தொடர்பு முறை, 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். கடலோர காவல்படை காவலர்களுக்கு, 66 உயிர்க்காப்பு மேலட்டைகள், 9.90 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story