ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வேலை இழக்கும் அபாயம்: மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வேலை இழக்கும் அபாயம்: மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 11 July 2017 7:15 PM GMT (Updated: 11 July 2017 5:48 PM GMT)

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு கையால் தயார் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு வரி கிடையாது.

சென்னை,

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு கையால் தயார் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு வரி கிடையாது. பகுதி எந்திரங்களை கொண்டு தயார் செய்யும் மெழுகு தீக்குச்சிகளுக்கு மட்டும் 6 சதவீதம் மத்திய கலால் வரி வசூலிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பகுதி எந்திர தொழிற்சாலைகளை, முழு எந்திர தொழிற்சாலைகளுடன் இணைத்து பட்டியலிட்டுள்ளனர். இதனால் தற்போது பகுதி எந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 18 சதவீதம் வரி செலுத்தவேண்டியது உள்ளது.

மரக்குச்சி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மட்டும் தான் முழு அளவில் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கும்போது, பகுதி எந்திர மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலையை முழு எந்திர துறையுடன் இணைத்திருப்பதை ஏற்க முடியாது. 18 சதவீதம் வரியை லாபம் மற்றும் தொழிலாளர்களின் கூலியையும் சேர்த்தே செலுத்த வேண்டியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலையை கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டி தொழிற்சாலையுடன் இணைக்கவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story