முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள் -புள்ளிவிவரத்துடன் பதிலளித்த பழனிசாமி


முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள் -புள்ளிவிவரத்துடன் பதிலளித்த பழனிசாமி
x
தினத்தந்தி 12 Jan 2018 10:04 AM GMT (Updated: 12 Jan 2018 10:04 AM GMT)

முதல்வராக பதவியேற்ற பிறகு, தான் கையெழுத்திட்ட கோப்புகள் எத்தனையென்று முதல்வர் பழனிசாமி புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார்.#TNAssembly #EdappadiPalanisamy

சென்னை, 

சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவற்றில் முக்கிய விவரங்கள் வருமாறு

ஆளுநர் உரையை பாராட்டியவர்கள் மற்றும் குற்றம் சாட்டியவர்களுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது அலுவலகத்தில் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை .

முதலமைச்சரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்துப் போட்டுள்ளேன். பல்வேறு பிரச்சனைகளுக்கு எனது தலைமையிலான அரசு சிறந்த தீர்வுகளை ஏற்படுத்தி தந்துள்ளது.

உடனுக்குடனான நடவடிக்கைகளால் எந்த கோப்புகளும் என் முன் தேக்கம் அடைவதில்லை.

ஒகி புயல் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததால் குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளோம். 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரையை பட்ஜெட் போல  நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக பட்ஜெட் தாக்கல்  செய்யப்படவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

தமிழக அரசின் கடன் விகித அளவு கட்டுக்குள்தான் உள்ளது, திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை.

புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன சேமிப்பறை கட்டப்படும்.

கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும்.

தமிழகத்தில் 1,599 பள்ளிகள் பல்வேறு விதங்களில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது 
என கூறினார்.

#TNAssembly #EdappadiPalanisamy 

Next Story