அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி ‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’


அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி ‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’
x
தினத்தந்தி 15 Jan 2018 9:30 PM GMT (Updated: 15 Jan 2018 7:50 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி இன்னும் தொழிலாளர்களின் கைகளுக்கு வந்து சேரவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

சென்னை, 

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 10-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வரை பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.750 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுவும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

தொழிலாளர்கள் காத்திருப்பு

இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு ரூ.750 கோடி நிலுவை தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த தொகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

தங்கள் வாரிசுகளுக்கு திருமணம் மற்றும் கல்விக்கு செலவிடுவதற்காக எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஆனால் முறையாக அனைவருக்கும் கைக்கு இந்த தொகை இதுவரை வந்து கிடைக்கவில்லை.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக அரசு கடந்த 10-ந் தேதி அறிவித்தது. அதனை தொடர்ந்து வங்கி மற்றும் போக்குவரத்து கழக நிர்வாக அலுவலகங்களுக்கு பொங்கல் விடுமுறை தினங்கள் வந்ததால் நிலுவை தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த தொகை விரைவாக கிடைக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தொழிற்சங்கத்தினர் கூறினர். 

Next Story