இன்று காணும் பொங்கல்: மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை


இன்று காணும் பொங்கல்: மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 16 Jan 2018 12:00 AM GMT (Updated: 15 Jan 2018 9:16 PM GMT)

காணும் பொங்கலையொட்டி இன்று சென்னை மெரினா கடலில் இறங்கி குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #pongal #marina

சென்னை,

காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். சென்னையை பொருத்தமட்டில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதுதவிர கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் 2 அமைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு வசதிக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக்குழுவினரும், மீட்புபணிக்காக தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் இருக்கும்.

இது தவிர உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் 6 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கோபுரங்களில் தலா 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வாக்கி-டாக்கி, பைனாக்குலர் ஆகியவை வழங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். யாராவது கடலில் இறங்கி குளிக்கிறார்களா? சங்கிலி திருடர்கள் ஊடுருவி இருக்கிறார்களா? என கண்காணிப்பார்கள்.

பாதுகாப்பு கருதி கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடலில் குளிக்க யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குதிரைகளில் போலீசார் சவாரி செய்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அது தவிர 10 நான்கு சக்கர வாகனங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மெரினா கடற்கரைக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும். இது மட்டுமின்றி ரோந்து வாகனங்கள் போலீசாரால் ரோந்து சுற்றிக்கொண்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை மீட்பதற்காக உழவர் உழைப்பாளர் சிலை, காந்திசிலை ஆகிய இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மெரினா கடற்கரைக்கு வரும்போதே குழந்தைகளின் கையில் அடையாள பட்டை கட்டப்பட உள்ளது. அந்த அடையாள பட்டையில் பெற்றோரின் பெயர், பெற்றோர்கள் அல்லது குழந்தைகளை அழைத்துச்செல்லும் உறவினர்களின் செல்போன் நம்பர்கள் இடம்பெறும். காணாமல் போய் மீட்கப்படும் குழந்தைகள் விரைவில் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த முறை சில வருடங்களாக மெரினாவில் காணும்பொங்கல் அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனர்.

கடலோரக்காவல் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வீரர்கள் ஹெலிகாப்டரில் மெரினா கடற்கரையை கண்காணிப்பார்கள்.

மாட்டு பொங்கல் தினமான நேற்றும் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மெரினாவில் கடலில் குளிக்கக்கூடாது என்று சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி கட்டப்பட்டு இருந்தது. அதை மீறி கடலில் குளித்தவர்களை குதிரைகளில் சென்ற போலீசார் எச்சரித்தனர். 

Next Story