அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு 1,050 காளைகளை அடக்க 1,241 வீரர்கள் களம் இறங்குகின்றனர்


அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு 1,050 காளைகளை அடக்க 1,241 வீரர்கள் களம் இறங்குகின்றனர்
x
தினத்தந்தி 16 Jan 2018 12:30 AM GMT (Updated: 15 Jan 2018 9:47 PM GMT)

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. 1,050 காளைகளை அடக்க 1,241 வீரர்கள் களம் இறங்குகின்றனர். ##jallikattu

மதுரை, 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழக அரசு மேற்கொண்ட நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், ஜல்லிக்கட்டு மீதான தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாமதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

கோர்ட்டு தடை நீங்கிய பின் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி விரிவான ஏற்பாடுகளுடன் முழுஅளவில் உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது. மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி அருகே நேற்று ஜல்லிக்கட்டு போட்டி எழுச்சியுடன் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

நேற்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். 446 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 700 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 25 பேர் காயம் அடைந்தனர்.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,050 காளைகள் இங்கு வந்து உள்ளன. இந்த காளைகளுக்கு, கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து தகுதிச்சான்று கொடுத்து உள்ளனர்.

இதேபோல் காளைகளை அடக்க தமிழகம் முழுவதிலும் இருந்து மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூரில் குவிந்து உள்ளனர். அவர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 1,241 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்று இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலங்காநல்லூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுத்து நிற்கும் இடம் முழுவதும் பந்தல் போடப்பட்டு இருக்கிறது. வாடிவாசல் அருகில் இருந்து காளைகள் ஓடி நிற்கும் இடம் வரை இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சவுக்கு கட்டைகளால் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைத்து உள்ளனர்.

தரைப்பகுதி முழுவதும் தென்னை நார்கள் பரப்பப்பட்டு உள்ளன. மேலும் 2 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்துள்ள வெளிநாட்டினருக்கு சுற்றுலா துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக் கட்டு போட்டியை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

முதல்-அமைச்சர் அமர்ந்து போட்டியை காணும் வகையில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

டாக்டர்கள் குழுவினர், கால்நடை டாக்டர்கள், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

சிறந்த காளைகளுக்கும், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் நன்கொடையாளர் கள் மூலம் தங்கக் காசுகள், கார், மோட்டார் சைக்கிள்கள், பசுமாடுகள், செல்போன்கள், பீரோ, கட்டில்கள், மின்விசிறி, அண்டா என சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பலவிதமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Next Story