கள்ளக்காதல் விவகாரத்தில் பரிதாபம் விஷ ஊசி போட்டு 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில் பரிதாபம் விஷ ஊசி போட்டு 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2018 10:30 PM GMT (Updated: 29 Jan 2018 8:10 PM GMT)

ஈரோட்டில் விஷ ஊசி போட்டு 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலன் கைவிட்டதால் அவர் இந்த பரிதாப முடிவை எடுத்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். கார் மெக்கானிக். இவருடைய மனைவி ஸ்ரீஜா (வயது 32). இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பிரனித் (6), சதீஸ் (4) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திரன் இறந்துவிட்டார். இதனால் ஸ்ரீஜா குடும்ப வருமானத்துக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளர் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீஜாவும், அவருடைய 2 மகன்களும் வீட்டில் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கள்ளக்காதல்

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஸ்ரீஜா வேலை பார்க்கும் தனியார் ஆஸ்பத்திரியில் வெளியூரை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவர் பணியாற்றி வருகிறார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் அந்த வாலிபருக்கும், ஸ்ரீஜாவுக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்ரீஜாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இதில் அவர்கள் 2 பேருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்தனர்.

கொலை

இந்தநிலையில் அந்த வாலிபருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் அவர் ஸ்ரீஜாவுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். ஆனால் ஸ்ரீஜா தன்னுடன் தொடர்ந்து வாழும்படி அந்த வாலிபரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீஜா மனவேதனை அடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து உள்ளார். ஆனால் தான் இறந்த பிறகு மகன்கள் ஆதரவு இல்லாமல் தவிப்பார்களே என்று நினைத்த ஸ்ரீஜா, மனதை கல்லாக்கி கொண்டு மகன்களுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார். பின்னர் அதே ஊசியை போட்டுக்கொண்டு ஸ்ரீஜாவும் தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கண்ட விவரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story