தமிழக ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்


தமிழக ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:17 PM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதை தடுக்க முடியாது என்றும், மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் அனைவரும் நீட் தேர்வு எழுதியே தீரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை ஏற்கமுடியாது.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து 2006-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இதனால் நீட் தேர்வு குறித்த முதன்மை வழக்கில் நுழைவுத்தேர்வு குறித்த தமிழகத்தின் வரலாறு மற்றும் சட்டத்தை எடுத்துக்கூறி எளிதாக விலக்கு பெறலாம். ஆனால், அதற்கான முயற்சிகளை செய்யாமல் நீட்டை தடுக்க முடியாது என அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் இருந்தோ, உச்ச நீதிமன்றத்திடம் இருந்தோ நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை செய்ய தமிழக அரசால் முடியாவிட்டால், நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியாளர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story