ஆதிச்சநல்லூரில் எடுத்த பொருட்களை பரிசோதனை செய்ய நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஆதிச்சநல்லூரில் எடுத்த பொருட்களை பரிசோதனை செய்ய நிதி ஒதுக்க  தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:15 PM GMT (Updated: 2 Feb 2018 8:19 PM GMT)

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனை செய்ய போதுமான நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டும். மேலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதேபோல மற்றொரு மனுவில், ‘ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தின் அருகில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு மணல் அள்ளினால் அகழாய்வு பணிகள் பாதிக்கும். எனவே குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

நிதி ஒதுக்க வேண்டும்

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் ஆஜராகி, ‘அகழாய்வு பணிகள் நடந்த பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை’ என்றார். பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, ‘ஆதிச்சநல்லூரில் 125 ஏக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு 25 ஏக்கரில் அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன’ என்றார்.

முடிவில், ’அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வயதை கண்டறிய கார்பன் பரிசோதனை செய்வதற்கு தேவையான நிதியை தமிழக தொல்லியல் துறை ஒதுக்க வேண்டும். அகழாய்வு நடக்கும் இடம் முழுவதும் வேலி அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அடுத்த கட்ட அகழாய்வுக்கு உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் பின்னர் இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story