மத்திய பட்ஜெட் விவசாயிகள் பக்கம் திரும்பியதால் இதமாக இருக்கிறது -நடிகர் கமல்ஹாசன் பேட்டி
மத்திய பட்ஜெட் கிராமப்புறம், விவசாயிகள் பக்கம் திரும்பி இருப்பதால் இதமாக இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10-ந்தேதி வருடாந்திர இந்திய கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் ‘தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் பேச உள்ளார்.
இதற்காக நேற்று அதிகாலை நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அதன் விவரம் வருமாறு:-
இதமாக இருக்கிறது
கேள்வி:- மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதே?
பதில்:- மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை நான் புரிந்துகொண்டதில் அவர்களின் கடைக்கண் பார்வை விவசாயிகள், கிராமத்தின் பக்கம் சற்று திரும்பி இருக்கிறது. இது மனதுக்கு சற்று இதமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரை பாராமுகமாகவே இருக்கிறது. அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு என்னுடைய கருத்தை தெளிவாக சொல்வேன்.
முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்
கேள்வி:- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே. உங்கள் கருத்து என்ன?
பதில்:- அப்படி சொல்ல முடியாது. பல வருடங்களாக நிகழ்ந்து வரும் சோகம். இதில் சற்று மகிழ்ச்சி என்றால் விவசாயிகள் பக்கம் பார்வை திரும்பி உள்ளது. கிராமத்தின் பக்கமும் திரும்பியிருப்பது இதமானது.
கேள்வி:- போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளத்தை தமிழக அரசு பிடித்தம் செய்து உள்ளதே?
பதில்:- அது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்.
கேள்வி:- அரசியல் பயணம் பற்றி?
பதில்:- அரசியல் பயணம் நடந்துகொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story