கோவை மாவட்டத்தில் நடந்த பெண் கொலை - கொள்ளையில் 3 பேர் பூடான் எல்லையில் கைது


கோவை மாவட்டத்தில் நடந்த பெண் கொலை - கொள்ளையில் 3 பேர் பூடான் எல்லையில் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 8:29 PM GMT)

கோவை மாவட்டம் அன்னூரில் பெண்ணை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்த 3 பேரை பூடான் எல்லையில் போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஊஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58), விவசாயி. இவருடைய மனைவி ராஜாமணி (48). இவர்களுடைய மூத்த மகள் சுகன்யா கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் ஜனனி கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மயில்சாமியும், ராஜாமணியும் ஊஞ்சக்குட்டையில் உள்ள தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர்.

மயில்சாமி தனது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் டைல்ஸ், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் (29), பிந்து (20), அஜய் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் தோட்டத்தில் ஒரு பகுதியில் தங்கியிருந்தனர்.

கொலை-கொள்ளை

கடந்த மாதம் 25-ந் தேதி நள்ளிரவில் அவர்கள் 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டினார்கள். மயில்சாமி கதவை திறந்ததும், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். மயில்சாமி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற 3 பேரும் திடீரென்று மயில்சாமியின் தலையில் கட்டையால் தாக்கியதுடன், மின்சாரத்தை அவர் மீது பாய்ச்சி கொல்ல முயன்றனர்.

சத்தம் கேட்டு வந்த ராஜாமணியையும் அவர்கள் கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

நடமாட்டம் கண்காணிப்பு

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணையில் அவர்களின் புகைப்படங்கள் கிடைத்தது. அதை போலீசார் வெளியிட்டதுடன், அவர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. தனிப்படையினர் ஆந்திரா விரைந்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

துப்பாக்கிமுனையில் கைது

இந்நிலையில் அவர்கள் 3 பேரும் மேற்குவங்காள மாநிலத்தில் பூடான் எல்லை அருகே இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்து அங்குள்ள போலீசார் உதவியுடன் பூடான் எல்லையில் உள்ள கைபல்புரி மாவட்டம், சிலிகுரி பகுதிக்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிந்து, அஜய், சாம்ராட் 3 பேரையும் போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘பூடான் எல்லையில் கைதான 3 பேரும் இன்று (சனிக்கிழமை) மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்கள். 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’ என்றனர். 

Next Story