சென்னை-பெங்களூரு இடையே ராணுவ தளவாட தொழிற்பாதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்


சென்னை-பெங்களூரு இடையே ராணுவ தளவாட தொழிற்பாதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:15 PM GMT (Updated: 2 Feb 2018 8:36 PM GMT)

நாட்டிலேயே முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை சென்னை-பெங்களூரு இடையே அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை,

மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் அவர், ‘இந்த நாட்டில் 2 பாதுகாப்பு உபகரண தயாரிப்பு தொழிற்பாதைகளை நிறுவுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு இதற்கான முயற்சி எடுக்கும். நட்புரீதியான பாதுகாப்பு உபகரண தயாரிப்பு கொள்கை-2018 வெளியிடப்பட்டு, அதன் மூலம் பொத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும்’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சென்னை-பெங்களூரு

தற்போது உள்ள பட்ஜெட் அறிவிப்பு ராணுவ துறைக்கான தொழிற்பாதை அமைப்பதற்கு அனுமதித்துள்ளது. அதன்படி, முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை தமிழ்நாட்டில் தொடங்கி சென்னையையும், பெங்களூரையும் இணைப்பதாக அமையும். 2-வது பாதுகாப்பு தொழிற்பாதை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட அருண் ஜெட்லிக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் முதலீடு

பாதுகாப்பு துறை தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாதுகாப்பு துறைக்கான உற்பத்திக்கும், தனியார் முதலீட்டுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதோடு, எப்.டி.ஐ. என்று அழைக்கக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான தாராளமயமாக்குதலையும் ஊக்குவிப்பதாக உள்ளது. 

Next Story