சென்னை தியாகராயநகரில் ரூ.36 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டிடம்
சென்னை தியாகராய நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.36½ கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலை, பாண்டி பஜார் போன்ற பகுதிகள் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தடுக்க சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்(ஸ்மார்ட் சிட்டி) தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த மாநகராட்சி மின்சாதன கிடங்கு இடிக்கப்பட்டு 16 ஆயிரத்து 146 சதுர அடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
நவீன முறையில்...
2 கீழ்தளம் (அண்டர்கிரவுண்டு), தரைத்தளம் மற்றும் 6 தளங்களை கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட உள்ள இந்த வாகன நிறுத்தத்தின் 2 கீழ்தளத்தில் தோராயமாக 550 இருசக்கர வாகனமும், தரைத்தளம் மற்றும் 6 மேல்தளத்தில் 250 நான்கு சக்கர வாகனமும் நிறுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ள இந்த வாகன நிறுத்தம் பேரிடர்களை சமாளிக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டினார்
ரூ.36 கோடியே 54 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஜெயவர்த்தன் எம்.பி., சத்தியநாராயணன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை ஆணையாளர்(பணிகள்) கோவிந்தராவ், முதன்மை தலைமை என்ஜினீயர் புகழேந்தி, மேற்பார்வை என்ஜினீயர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story