கருணைக் கொலை செய்து விடுங்கள்: திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை!


கருணைக் கொலை செய்து விடுங்கள்: திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை!
x
தினத்தந்தி 13 Feb 2018 11:26 AM GMT (Updated: 13 Feb 2018 11:26 AM GMT)

தொடர்ந்து விமான சேவைத்துறையில் வேலை மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார். #Transgender

சென்னை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. வயது 26. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2010-ம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார்.இவர் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரியும் கூட. சக மாணவர்களின் நக்கல், நையாண்டி, கிண்டல் என சகலவற்றையும் சகித்துக்கொண்டு படித்தால் மட்டுமே இந்தப் பூமியில் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தனது பெண் தன்மையை மறைத்தே அவர் இன்ஜினியர் ஆகியிருக்கிறார்.

பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த ஷானவி. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பணிபுரிந்த பின்னர், முறையான பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். பின் தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார். இவர் பெண்ணாக மாறியதை அறிந்த பெற்றோர்கள் ஷானவியை ஏற்க மறுத்துவிட்டனர். ஆசை ஆசையாக வளர்த்த தம்மை பெற்றோர்கள் ஏற்காததற்கு காரணம், அவர்களிடம் சரியான புரிந்துணர்வு இல்லாமைதான் என வேதனைப்படுகிறார் ஷானவி. பெற்றோர்கள் கைவிட்டாச்சு. சரி, நம்பிகைதான் வாழ்க்கை என மீண்டும் பொருளாதாகப் போராட்ட வாழ்க்கையில் களமிறங்கியிருக்கிறார் ஷானவி.

அந்த நேரத்தில் தான் ஏர் இந்தியாவில் இருந்து மீண்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ஒரு முறை.. இருமுறை அல்ல.. மொத்தமாக நான்கு முறை.. ஆனால் நான்கு முறையும் வேலைக்கு தேர்வானவர்களின் இறுதிப்பட்டியலில் ஷானவி பெயர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் ஏமாந்து போன ஷானவி இறுதியாக ஏர் இந்தியா, மற்றும் விமான போக்குவரத்து அமைச்சத்திடம் இது குறித்து முறையிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அளித்த பதில் ஷானவியை மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. எங்களது ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே தவிர திருநங்கைகளுக்கு அல்ல என கைவிரித்துவிட்டனர்.

எனக்குத் தகுதி இருக்கிறது. வேலை பார்த்த அனுபவமும் உண்டு. எல்லோவற்றையும் தாண்டி நான் இந்திய நாட்டின் பிரஜை. ஆனால் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதில் தகுந்த நடவடிக்கை வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டின்  கதவை இறுதியாக தட்டியிருக்கிறார் ஷானவி. சுப்ரீம் கோர்ட்டும்  இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 17 தேதி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை விமானப் போக்குவரத்துத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஷானவி.

பாலியல் தேர்வின் காரணமாக பெண்ணாக மாறினேன். எனது கனவான விமான பணிப்பெண் வேலைக்கு தொடர்ந்து முயன்றேன். எனக்கு தகுதி, திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் நான் திருநங்கை என்பதைக் காரணம் காட்டி வேலை மறுக்கப்படுகிறது.

இதற்கு மேலும் தொடர்ந்து போராட என்னால் இயலவில்லை. இப்படி இருந்தால் நான் எப்படி வாழ்வது? நான்கு முறை தொடர்ந்து முயற்சித்தும் விமான சேவைத்துறையில் எனக்கு வேலை மறுக்கப்படுவதால், வாழ வழியில்லை. எனவே கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story