திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக இரா.கண்ணன் ஆதித்தன் பதவி ஏற்றார்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக இரா.கண்ணன் ஆதித்தன் பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:15 PM GMT (Updated: 19 Feb 2018 7:53 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பதவி ஏற்றார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பதவி ஏற்றார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தனை தமிழக அரசு நியமித்தது. அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று தக்காராக பதவி ஏற்று கொண்டார். தொடர்ந்து அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் இரா.கண்ணன் ஆதித்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தக்காராக பணியாற்ற அருள்புரிந்த முருகபெருமானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணியை சிறப்பாக செய்வதற்கு முருகபெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உலகத்தரம் வாய்ந்த ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஈடுபாட்டுடன் தொண்டுபுரிந்து வருகிறோம். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து தர கடமைப்பட்டு இருக்கிறேன். கோவிலுக்கு தேவையானவற்றை ஆராய்ந்து, அவற்றை நிறைவேற்ற ஏற்பாடு செய்வேன்.

கோவிலில் வெளிப்பிரகார மண்டபத்தை கட்டுவதுதான் என்னுடைய முக்கிய பொறுப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதேபோன்று இந்த மண்டபத்தை சிறப்பாக கட்டுவதுதான் என்னுடைய தலையாய பணியாக இருக்கும். இதனை சிறப்பாக நிறைவேற்ற முருக பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்.

என்னுடைய தம்பி சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் ஆதரவு எனக்கு பக்கபலமாக உள்ளது. அவருக்கும், இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இரா.கண்ணன் ஆதித்தன், பிறந்த ஊரான காயாமொழியில் உள்ள முப்புராதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த அவருக்கு, கோவில் இணை ஆணையர் பாரதி, முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன், உதவி ஆணையர் ராமசாமி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் திரளானவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற இரா.கண்ணன் ஆதித்தனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கல்வீடு முருகன் ஆதித்தன், கல்வீடு பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ராகவ ஆதித்தன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் செல்வன், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story