சிவகங்கையில் ”வக்கீல்கள் தாக்கியதால்” அரசுப் பேருந்து ஓட்டுனர் விஷமருந்தி தற்கொலை முயற்சி


சிவகங்கையில் ”வக்கீல்கள் தாக்கியதால்” அரசுப் பேருந்து ஓட்டுனர் விஷமருந்தி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 Feb 2018 5:25 PM GMT (Updated: 22 Feb 2018 5:25 PM GMT)

சிவகங்கையில் அரசு பேருந்து ஓட்டுனர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதால் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#Tamilnews

சிவகங்கை,

பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பரமக்குடி கிளையில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஜெயராமன் என்ற செல்வராஜ் (வயது54). இவர் தனது குடும்பத்துடன் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பரமக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பஸ்சில் டிரைவராக சென்று வந்தார்.  திருச்சியில் இருந்து புறப்பட்டு சிவகங்கை வழியாக பரமக்குடிக்கு பஸ்சை ஓட்டிவந்தார். அப்போது சிவகங்கை வந்த போது வக்கீல்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், பஸ்சை அனுப்பியபோது டிரைவரிடம் வக்கீல்கள் பஸ்சை நிறுத்துமாறு கூறி உள்ளனர். அவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் வக்கீல்கள் பஸ்சை தடுத்து டிரைவரை தாக்கி உள்ளனர். பின்னர் டிரைவர் செல்வராஜ் பஸ்சை பரமக்குடிக்கு ஓட்டிவந்து பணி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் செய்தி ஒளிபரப்பாகி உள்ளது. இதை கண்டு வீட்டில் இருந்தவர்கள், உறவினர்கள் அவரிடம்,விசாரித்துள்ளனர். பின்னர் மனஉளைச்சலுடன் காணப்பட்ட டிரைவர் செல்வராஜ் திடீரென தற்கொலை முயன்று வி‌ஷம் குடித்து வீட்டின் அருகே நான்குவழிசாலையில் மயங்கி கிடந்துள்ளார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தற்கொலை செய்வதற்குமுன் வீட்டில் செல்வராஜ் கடிதம் எழுதி வைத்து விட்டு வந்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story