சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 20 March 2018 1:44 AM GMT (Updated: 20 March 2018 1:44 AM GMT)

சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Natarajan

சென்னை,

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ந் தேதி நடராஜன் வீடு திரும்பினார். சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.இந்தநிலையில், நடராஜனுக்கு 17 ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவரை, உறவினர்கள் குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெறும் அவருடைய சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டன. இதனால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நடராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெசண்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  காலை 11 மணிக்கு பிறகு தஞ்சையில் உள்ள அவரது சொந்த ஊரான விளாருக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. 

தலைவர்கள் இரங்கல்

சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ம.நடராஜன் மறைவுக்கு, கி.வீரமணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

*நடராஜனின் மறைவு, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என்றும் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க மிகப்பெரும் பங்கை நடராஜன் செய்துள்ளார் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

*மொழிப்போர் வீரரான நடராஜனின் மறைவுக்கு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

*சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவு பேரிழப்பு என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.


Next Story