எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்திற்குள் வந்த ரத யாத்திரை அரசியல் கட்சி தலைவர்கள் கைது


எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்திற்குள் வந்த ரத யாத்திரை   அரசியல் கட்சி தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 20 March 2018 5:23 AM GMT (Updated: 20 March 2018 5:23 AM GMT)

நெல்லை செங்கோட்டை வழியாக ரதயாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தது. ராம் ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். #RathaYatra #VHPRadhaYatra #RamarajyaRathaYatra

சென்னை

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று  ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரைமூலம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்திவருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர், வெளிநடப்புச் செய்தனர்.

தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்புக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ட்விட்டரில் 'ராம் ராஜ்ய யாத்திரை' என்ற பெயரில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கும், அதற்கு அனுமதியளித்துள்ள மத்திய பா.ஜ.க அரசின் எடுபிடியான அ.தி.மு.க அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ராமர் கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, மீறி நுழைந்தால், தமிழக எல்லையிலேயே கைதுசெய்து, உத்தரப்பிரதேசத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று, டி.டி.வி.தினகரன் ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , ரத யாத்திரை நெல்லை வழியாக வர உள்ளதால், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

ரத யாத்திரை தமிழக எல்லையான நெல்லை கோட்டை வாசல் கோயில் பகுதிக்கு வந்தது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழையும் இந்துத்துவ ரத யாத்திரையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற அரசியல் தலைவர்கள் பலர், நேற்று இரவே கைதுசெய்யப்பட்டனர். இன்று காலை, மதுரை- விருதுநகர் மாவட்ட எல்லையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திருமாவளவனை காவல்துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தற்போது, வாடிப்பட்டியில் உள்ள நாடார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

வி.எச்.பி. ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டம்: தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யபட்டார்.

செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மறியலில் ஈடுபட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யபட்டனர்.

Next Story