கணித தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை


கணித தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 23 March 2018 10:45 PM GMT (Updated: 23 March 2018 10:45 PM GMT)

கணித தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவியுடன் மணிப்பூர் மாநிலத்தில் தங்கி, தச்சு வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகள் சர்மிளா (வயது 16). இவர் மட்டும் அதே தெருவில் உள்ள தனது உறவினர் பெரியசாமி என்பவரின் வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தற்போது பிளஸ்-1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந் தேதி கணித தேர்வு நடைபெற்றது. அதில் வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், இதனால் சர்மிளா கணித தேர்வு சரியாக எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவிரக்தியில் இருந்து வந்த சர்மிளா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவி சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story