தமிழ்மொழி இடம் பெற்ற முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்


தமிழ்மொழி இடம் பெற்ற முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 8:18 PM GMT)

தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தமிழ்மொழி இடம் பெற்ற முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை,

முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் புறப்படும் மற்றும் சேரும் இடம் குறிப்பிடப்படும் என்று ரெயில்வே மந்திரி தெரிவித்தார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வேக்குட்பட்ட சென்னை சென்டிரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் அந்த திட்டம் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் இன்று(சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்பதிவில்லா டிக்கெட் பெறும் முறை (யு.டி.எஸ்.), தானியங்கி டிக்கெட் பெறும் முறை (ஏ.டி.வி.எம்.), காசை செலுத்தி டிக்கெட் எடுக்கு முறை (சி.ஓ.டி.வி.எம்.) ஆகிய முறைகளில் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் 5-ந்தேதி (இன்று) முதல் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் புறப்படும் மற்றும் சேரும் இடம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடப்பட்டு இருக்கும். திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரெயில் நிலையங்களில் மட்டும் மலையாள மொழி இடம் பெற்று இருக்கும்.

பல ரெயில் நிலையங்களில் பல்வேறு மாடல் டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் இருப்பதால், சில ரெயில் நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் படிப்படியாக அந்த மாநில மொழிகள் இடம்பெற வழிவகை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story