என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப கட்டணத்தை டி.டி.யாக வழங்கலாம் ஐகோர்ட்டில், அண்ணா பல்கலைக்கழகம் தகவல்


என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப கட்டணத்தை டி.டி.யாக வழங்கலாம் ஐகோர்ட்டில், அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
x
தினத்தந்தி 11 May 2018 9:45 PM GMT (Updated: 11 May 2018 7:55 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப கட்டணத்தை டி.டி.யாக வழங்கலாம் என்று ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப கட்டணத்தை டி.டி.யாக வழங்கலாம் என்று ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதன்படி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணியும் நடந்துவருகிறது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த 3 நாட்களாக நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின்போது, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது வங்கி கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?, விண்ணப்பக்கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது கேட்பு காசோலையாகவோ வசூலிக்கலாமா? என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘விண்ணப்ப கட்டணம் கேட்பு காசோலையாக (டி.டி.யாக) பெற்றுக்கொள்ளப்படும். ஆனால் இதற்கு ஏற்றாற்போல மென்பொருளை மாற்றியமைக்க வேண்டும். அதனால் வருகிற 18-ந் தேதி முதல் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும்‘ என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதுகுறித்து விரிவான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story