தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 8:32 PM GMT)

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பருவமழை காலத்தில் பெய்யும் மழையை போல, சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக் கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

மேலும், 12-ந் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சமாக நாளை (இன்று) 100 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், கல்லணை, மானாமதுரையில் தலா 5 செ.மீ., தொழுதூரில் 4 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., மழையும் பெய்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மூலனூர், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, பேச்சிப்பாறை, பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் ஆகிய இடங்களிலும் லேசான மழை பெய்தது.

Next Story