பள்ளிக்கூடங்களை தொடர்ந்து மருத்துவமனைகளையும் மூடுவதற்கு ரெயில்வே முடிவு


பள்ளிக்கூடங்களை தொடர்ந்து மருத்துவமனைகளையும் மூடுவதற்கு ரெயில்வே முடிவு
x
தினத்தந்தி 11 May 2018 9:12 PM GMT (Updated: 11 May 2018 9:12 PM GMT)

பள்ளிக்கூடங்களை தொடர்ந்து மருத்துவமனைகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

சென்னை,

ரெயில்வேயில் சீர்திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பிபேக் தேப்ராய் கமிட்டி ரெயில்வே சார்பில் பள்ளிக் கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை நடத்த வேண்டாம் என்று பரிந்துரைத்தது. அதன்பேரில் ரெயில்வே நடத்தி வந்த பள்ளிக்கூடங்களை மூடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் ரெயில்வே சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளையும் மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரெயில்வேக்கு சொந்தமாக 125 மருத்துவமனைகள் உள்ளன. தெற்கு ரெயில்வேயில் பெரம்பூர், மதுரை, திருச்சி, அரக்கோணம் உள்பட 11 இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. இதில் 1,232 படுக்கைகள் உள்ளன. அங்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரெயில் விபத்துகளில் சிக்குபவர்கள், ரெயில்வே ஊழியர்கள் குடும்பத்தினர், பயணிகள் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தல், முதலுதவி சிகிச்சை, சுகாதாரமான குடிநீர், உணவு வழங்குவதை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை ரெயில்வே சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

பிபேக் தேப்ராய் கமிட்டி தகவலின்படி, 2,597 மருத்துவ அதிகாரிகளும், 54 ஆயிரம் மருத்துவ பணியாளர்களும் இதற்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்வே நிர்வாகம் மருத்துவமனைகளை மூடுவதற்கு முடிவு எடுத்ததால் முதல்கட்டமாக ரெயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ரெயில்வே ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறும், அதற்கான மருத்துவ செலவுகளை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிபேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரையை ஏற்று ரெயில்வே மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளோடு இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில் ரெயில்வே பொதுமேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே சுகாதார சேவைகளை தாங்கள் விருப்பப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விருப்ப முடிவுக்கு விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளை மூடுவதற்கு ரெயில்வே முடிவு எடுத்திருப்பதால் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story