சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2018 9:24 PM GMT (Updated: 11 May 2018 9:24 PM GMT)

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என்று கைவிரித்து விட்டதாக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,347 கோடி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1,583 நிலுவைத்தொகை வைத்துள்ளன. இவற்றை வசூலித்துத் தருவதாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசு கூறிவரும் போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால் போன்ற பொருட்களை தயாரித்தாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை பதுக்கிக்கொண்டு சர்க்கரை விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மட்டும் வரவு வைத்து நட்டக் கணக்கு காட்டுகின்றன.

இந்த மோசடிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு தெரியும் என்றாலும், ஆலைகள் நடத்தும் மோசடிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். உழவர்களுக்கு இன்று வரை நிலுவை கிடைக்காததற்கு காரணமே ஆட்சியாளர்களின் துரோகம் தான்.

தமிழக ஆட்சியாளர்களுக்கு உண்மையாகவே உழவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் சர்க்கரை கிடங்குகளை மூடியிருக்கக்கூடாது. மாறாக ஆலைகளையே மூடி அவற்றை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆலைகளிடம் இருந்து தங்களுக்கு கிடைக்கும் வருமானம் தடைபடக்கூடாது என்பதற்காக அதை செய்ய அரசு மறுக்கிறது.

ஆனால், அரசின் உத்தரவையே ஆலைகள் செயல்படுத்த மறுத்துவிட்ட நிலையில் அவை அனைத்தையும் அரசுடமையாக்கி பொறுப்பான அதிகாரிகளை நியமித்து இயக்க வேண்டும். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தில் உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story