கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு


கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2018 8:32 PM GMT (Updated: 12 May 2018 8:32 PM GMT)

கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கும்போது முழுமையான கட்டமைப்பு வசதியுடனும், உயர்தர சுகாதார பொலிவுடனும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். எனவே பள்ளிகள் திறக்கும் முன்பே இவைகளை செயல்படுத்திட அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகத்தினருக்கும், முதல்வர்களுக்கும் உரிய அறிவுரைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு குடிநீர் குழாய், கழிவறைகள், சிறுநீர் கழிப்பறைகள் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் கோடை விடுமுறையில் தேவையான எண்ணிக்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் புதர்கள், கற்குவியல்கள், கழிவுப் பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு துப்புரவு செய்யப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பள்ளம் ஏதேனும் இருந்தால் அவற்றை மூடி சரிசெய்தல் வேண்டும். நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த்தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு, அதனை பூட்டியிருக்க வேண்டும்.

மின் இணைப்புகளைப் பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடிவைக்க வேண்டும். பழுதடைந்த மின்விசிறி, டியூப்லைட் ஆகியவை இருப்பின் அவற்றை மாற்றி புதியவற்றை பொருத்த வேண்டும். தீயணைப்பான் சாதனங்களை சோதனை செய்து காலாவதியாகியிருப்பின் புதுப்பிப்பது அவசியம்.

பள்ளி கட்டிடங்களின் மேற்கூரைகளில் எந்தவிதமான பழுதும் இருக்கக்கூடாது. கோடை விடுமுறையில் போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்படும் ஆய்வில் அனைத்து பள்ளி வாகனங்களையும் முன்னிலைப்படுத்தி தரச்சான்று பெறப்பட வேண்டும். தரச்சான்று பெறாத வாகனங்களை இயக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story