முன்விரோதம் காரணமாக இருவருக்கு அரிவாள் வெட்டு 2 வாலிபர்கள் கைது


முன்விரோதம் காரணமாக இருவருக்கு அரிவாள் வெட்டு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 May 2018 9:02 PM GMT (Updated: 13 May 2018 9:02 PM GMT)

தண்டையார்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த ஞானம் என்பவரின் மகன் பிரசாத் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் கோகுல் (22). இவர்களுக்கும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த அஜித் (22), சரவணன் (22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரசாத், கோகுல் ஆகிய இருவரும் நேற்று மாலையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அஜித், சரவணன் இருவரும், அவர்களை வழிமறித்து அரிவாள்களால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் பிரசாத், கோகுல் இருவருக்கும் தலையிலும், கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர்கள் இருவரும், தங்களை காப்பாற்றுமாறு அலறினர். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட அஜித், சரவணன் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து அரிவால்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story