முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு


முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு
x
தினத்தந்தி 16 May 2018 11:16 PM GMT (Updated: 16 May 2018 11:17 PM GMT)

தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து குஷ்பு வெளியேற்றப்பட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் அவரது நடிப்பு எடுபடாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை,

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது.

நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

குஷ்பு ஒரு நடிகை. படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலவசமாக அவர் பிரசாரம் செய்யவில்லை. ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்தார். பிறகு குளுகுளு அறையில் போய் படுத்துக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய அந்த தலைவர் அழைத்தபோது, அதிக பணம் கேட்டார். இத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும். அந்த நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நான் எம்.ஜி.ஆர்., வாஜ்பாய், ராகுல்காந்தி ஆகியோருடன் பழகியவன். அரசியல் பயின்றவன்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறீர்கள். காசு வாங்காமல் கட்சி பணி ஆற்றியது உண்டா?. நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். தி.மு.க.வில் அவர் பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும், தி.மு.க.வினரும் மறக்கவில்லை.

2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story