பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் தொடர்பு: இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு


பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் தொடர்பு: இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு
x
தினத்தந்தி 16 May 2018 11:29 PM GMT (Updated: 16 May 2018 11:29 PM GMT)

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பழனி,

பழனி முருகன் கோவிலுக்கு புதிதாக ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக முருகன் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே. ராஜா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறையினர் மலைக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர். அதேபோல் கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, அப்போதைய அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

ஐம்பொன் சிலை மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சம்பந்தப்பட்டிருப்பது கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐம்பொன் சிலையில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கவேண்டும், சிலையின் வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரியாக தனபால் இருந்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

முன்னாள் ஆணையர் தனபாலை விசாரணைக்கு வரும்படி கூறி 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. எனவே அவருடைய வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். சிலருடைய உதவியுடன் முன்னாள் ஆணையர் தனபால் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனபால் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு தனபால் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இந்த வழக்கில் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story