தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 May 2018 12:00 AM GMT (Updated: 17 May 2018 12:00 AM GMT)

தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இறுதி வரைவுத்திட்டத்தை உருவாக்குவதில், தமிழகத்தை வஞ்சித்திடும் உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே தினந்தோறும் ஒரு குழப்பத்தை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உருவாக்கி, பொறுத்துக் கொள்ளமுடியாத காலதாமதம் ஏற்படுத்தி வருவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி வரைவுத்திட்டத்தை ஆறு வார காலத்திற்குள் உருவாக்குங்கள். எவ்வித கால அவகாசமும் கொடுக்கப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், ஆள், அம்பு, சேனை என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள பேரரசை கையிலே வைத்துக்கொண்டு, ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்க மூன்று மாத கால தாமதத்தை மத்திய அரசு செயற்கையாக உருவாக்கியிருப்பது தமிழக நலனை அடியோடு புறக்கணிப்பதாக அமைந்துள்ளது.

வாரியமோ, ஆணையமோ எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வரைவுத் திட்டத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு சொல்கிறது என்றால், இதே மத்திய நீர்வளத்துறைச் செயலாளர், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்று முன்பு கூறியது ஏன்?. தமிழக அரசின் சார்பிலும் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை வலியுறுத்தாமல் திடீரென்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணி என்ன?.

ஆனால், தன்னாட்சி அமைப்பு என்பதைப் பற்றி தமிழக அரசு ஏன் உச்சநீதிமன்றத்தில் வாய் திறக்கவில்லை?. மத்திய பா.ஜ.க. அரசும் தனது வரைவுத்திட்டத்தில் தன்னாட்சி அமைப்பு என்று குறிப்பிடவில்லை. மாறாக, கண்காணிப்பு அமைப்பு என்றுதான் கூறுகிறது. எனவே, மத்திய அரசு ஒரு அதிகாரமில்லாத வரைவுத்திட்டத்தைக் கொடுத்து விட்டது. ஜெயலலிதா பாணியில் சொல்லவேண்டுமானால், பல் இல்லாத அமைப்பு. இனிமேல், அது வாரியமாக இருந்தால் என்ன, அல்லது ஆணையமாக இருந்தால் என்ன என்ற உள்நோக்கம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழக அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தின்படி அமைக்க வேண்டிய வாரியத்திற்கு என்ன அதிகாரம்? அதை வரைவுத்திட்டத்தில் தெளிவு படுத்துங்கள் என்று ஏன் உறுதிபட வாதிடவில்லை?. புதிய வரைவுத் திட்டத்திலாவது காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா, தீர்ப்பை நிறைவேற்றும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு இருக்குமா என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது.

அதனால் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரம்மிக்க அதாவது காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பில் உள்ளவாறு தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு நாளை (இன்று) தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும். தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வலிமையாக எடுத்து வைக்க வேண்டும். தன்னாட்சி அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியம் என்பது, உள்ளடற்ற வெறும் கூடு போன்றது, விசை ஒடிந்த அம்பைப் போன்றது. இதை இப்போதாவது உணரவில்லை என்றால், அதுவே பெரும் பிழையாகி, சரித்திரத்தின் சாபத்திலிருந்து தப்ப முடியாது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story