என்ஜினீயரிங் படிப்பில் சேர 75 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரிப்பு


என்ஜினீயரிங் படிப்பில் சேர 75 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2018 10:41 PM GMT (Updated: 17 May 2018 10:41 PM GMT)

என்ஜினீயரிங் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். அதே சமயம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரித்து இருப்பதால் அதில் சேர மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கு 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினம் வரை குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் வந்திருந்தன.

இதனிடையே பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. மதிப்பெண்ணை வைத்து அதற்கு ஏற்ற வகையில் எந்த படிப்பில் சேரலாம் என்று மாணவர்கள் காத்திருந்தனர். மதிப்பெண்களை பார்த்து விட்டு நேற்று வழக்கத்தை விட அதிகமான மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலரும் தேர்வு முடிவை வைத்து என்ஜினீயரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்து உள்ளனர். நேற்று வரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்பு எல்லாம் என்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைத்தது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்கு போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. என்ஜினீயரிங் படித்துவிட்டு ஏராளமானோர் தங்கள் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலையில் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தற்போது என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

அதே சமயம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தற்போது மவுசு அதிகரித்து உள்ளது. இதனால் சில வருடங்களாகவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை அடுத்து நேற்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் சில தனியார் கல்லூரிகளில் இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதனால் இந்த வருடம் கலை அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன.

Next Story