போலீசை தாக்கியதாக வழக்கு: முன்ஜாமீன் கேட்டு சீமான் மனு ஐகோர்ட்டு நோட்டீஸ்


போலீசை தாக்கியதாக வழக்கு: முன்ஜாமீன் கேட்டு சீமான் மனு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 31 May 2018 7:15 PM GMT (Updated: 31 May 2018 6:47 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முன்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின.

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முன்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது, போலீசாரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் போராட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டேன். ஆனால் போலீசாரை தாக்கியதாக என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இதற்கு பதில் அளிக்கும்படி திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story