3 துணை வட்டாட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு ஐகோர்ட்டு கண்டனம்


3 துணை வட்டாட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 7 Jun 2018 12:15 AM GMT (Updated: 6 Jun 2018 8:36 PM GMT)

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள்.

மதுரை, 

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள்.

மேலும் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் அடுக்கடுக்காக 11 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்; காயம் அடைந்தவர்களை வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்கவும், அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவும் உத்தரவிட வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

இலவச சட்ட உதவி

இந்த மனுக்களை கடந்த மாதம் 25-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்குரிய செலவை அரசே ஏற்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள்

அப்போது மனுதாரர் முத்து அமுதநாதன் சார்பில் ஒரு துணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் சேகர் (தேர்தல்), தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் சந்திரன்(கலால்) ஆகிய 3 பேரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

பின்னர் மனுதாரர்களின் வக்கீல்கள் வாதாடுகையில், “சட்டப்படி எந்த விதமான அதிகாரமும் இல்லாதபோது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட முடியாது. இது உயர் அதிகாரிகள் தங்களது பணியை முறையாக செய்ய தவறியதையே குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் தூத்துக்குடியில் 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்பது தெரிய வேண்டும். அதற்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

நியாயப்படுத்த முடியாது

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “தூத்துக்குடி போராட்டத்தின்போது அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் அவர்களின் அருகில் போலீசார் நெருங்க முடியவில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் என ஏராளமானவை சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “போலீசார் தூரத்தில் இருந்து தான் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் துரதிர்ஷ்டமானது. இச்சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறிய வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

நோட்டீஸ்

பின்னர், சம்பந்தப்பட்ட துணை தாசில்தார்கள் 3 பேரையும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்த்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் நிலுவையில் உள்ளன. அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story