விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து


விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:49 PM GMT)

விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை செயல்படுத்தும் நேரம் வந்து விட்டதாக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தற்போது நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த கோரி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2007-ல் எனது (எம்.எஸ்.சுவாமிநாதன்) தலைமையில் விவசாயிகள் தேசிய ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

அதாவது, மொத்த உற்பத்தி செலவில் (ஊதியக் கட்டணம், குடும்ப உழைப்பின் மதிப்பு, குத்தகை, சொந்த நிலமாக இருந்தால் வட்டி மற்றும் மூலதனத்தின் மீது வட்டி, வாடகை மற்றும் அதற்கு வட்டி உள்பட) 50 சதவீதத்திற்கும் அதிகமான மானிய ஆதரவு விலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் முக்கியவத்துமும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கான தேசிய கொள்கை 2007-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதில் அந்த வரைவு கொள்கை சிறப்பு அழுத்தத்தை கொடுத்தது. பண்ணை உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க ஒரு பார்முலா (திட்டம்) பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பித்து 10 வருடங்கள் ஆனாலும், குறிப்பாக விவசாயத்தின் பொருளாதாரம் குறித்த அதன் செயல்பாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவது ஒன்று தான், அவர்கள் கடன் சுமையில் இருந்தும், வறுமையில் இருந்தும் வெளியேற உதவும் ஒரே வழி. பருவமழை மற்றும் சந்தையானது விவசாயிகளின் நலனுக்கான இரண்டு முக்கிய தீர்மானங்கள் ஆகும். தற்போது, பருவமழை என்பது நிச்சயமற்றது, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர நிகழ்வுகள் அடிக்கடி வருகின்றன. இதே மாதிரி தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்தலின் மூலம் விவசாயிகளின் கடன் சுமையிலிருந்தோ அல்லது வறுமையில் இருந்தோ மீள முடியாததால்தான் கடன் தள்ளுபடி செய்வதற்கான தேவை அதிகமாக உள்ளது.

விவசாயம் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகள் சமுதாயத்தின் கவனத்தைக் ஈர்க்க, நகரங்களில் வசிப்பவர்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பால் போன்ற அடிப்படை தேவைகளை வினியோகம் செய்ய விடாமல் தடை செய்கின்றனர்.

எனவே, விவசாய சமூகத்தின் குரலைப் பிரதிநிதித்துவம் செய்து, விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை பரிசீலித்து அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விவசாயம் நல்ல முறையில் நடைபெறவில்லை என்றால் நம் போன்ற விவசாய நாடுகளில் வேறு எதுவுமே நல்ல முறையில் நடைபெறாமல் போகலாம். குறிப்பாக பெண் விவசாயிகள் மற்றும் நகர்ப்புற வேளாண்மையை ஊக்குவித்து எதிர்காலத்தில் விவசாயம் சிறப்புடன் இருந்தால் மட்டுமே பொருளாதார ரீதியாக விவசாயிகள் உயிர் வாழ முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story