‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை


‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 9:51 PM GMT)

‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

பயணிகள் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் முன்பதிவு இல்லாதவையாக, யார் வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்று இயக்கப்படும் ‘அந்த்யோதயா’ ரெயில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தனையின் செயல்பாடு ஆகும்.

மாநில அரசு நிதி நெருக்கடி

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 2009-14-ம் காலத்தில் ஆண்டுதோறும் ரூ.879 கோடி மட்டும் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கி உள்ளது.

ரூ.20 ஆயிரத்து 64 கோடியில் 27 ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்காக பிரதமர் நரேந்திரமோடி ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். இதில் பாதி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். எனினும் மாநில அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முழுத்தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதிகாரிகள் விருப்பம்

தமிழகத்தில் தெற்கையும், வடக்கையும் இணைக்கக் கூடிய வகையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. நிச்சயம் இன்னொரு ரெயில் தேவை. எனவே அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை ஏன் நீட்டிக்க கூடாது? என்று ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்னிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

அவர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, ‘போக்குவரத்து நெரிசலால் (சிக்னல் பிரச்சினை) தற்போது முடியாது என்று தெரிவித்தார். இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன் அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில் 4 வழிச்சாலைகள் அல்ல; 8 வழிச்சாலைகளுக்கும் மேல் அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வரையில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்கள் வேகத்தை அதிகரிக்க

மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசும்போது, ‘தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதை, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி, ரெயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. செங்கோட்டை-புனலூர் இடையே ரூ.390 கோடியில் தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. நாளை(இன்று) அது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும்.

பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரெயில்களில் வேகத்தை மணிக்கு 25 கி.மீ அதிகரிப்பது குறித்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார். 

Next Story