டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.115 கோடி தொகுப்பு திட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.115 கோடி தொகுப்பு திட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 11:30 PM GMT (Updated: 8 Jun 2018 10:21 PM GMT)

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.115 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள குறுவை சாகுபடி செய்யும் பகுதிகளில், பிரதானமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்தே குறுவை நெல் சாகுபடி அமைகிறது.

வழக்கமாக, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி அன்று பாசனத்திற்காக அணை திறக்கப்படும். அவ்வாறு 12-ந்தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டால், மேற்கண்ட பகுதிகளில் 3.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

கடந்த 6 ஆண்டுகளாக, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12-ந்தேதியன்று அணையினை பாசனத்திற்கு திறக்க இயலவில்லை.

சென்ற ஆண்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரினை விடுவிக்காததால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை நெல் சாகுபடி செய்ய போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால், இந்த அரசு, சென்ற ஆண்டில் குறுவை சாகுபடி செய்யும் நெல் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

12-ந்தேதி தண்ணீர் திறப்பு இல்லை

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக மட்டுமே உள்ளது. வினாடிக்கு 2,190 கன அடி மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கின்றது. இதைக் கொண்டு, குறுவை நெல் சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளான 12-ந் தேதியன்று அணையினை திறந்து விட இயலாத சூழ்நிலை உள்ளது.

கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினை கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

எனவே, தண்ணீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி, நடப்பாண்டில் குறுகிய கால நெல் மற்றும் பயிறு வகைப் பயிரையும் சாகுபடி செய்வதற்காக, இந்த ஆண்டின் குறுவை தொகுப்புத் திட்டத்தினை அறிவிக்கிறேன். அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

நெல் விதைகள்

குறுவை பருவத்தில் 79,285 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு 1,750 ரூபாய் மானியம் வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகளை மானிய விலையில் வினியோகிப்பதற்கு 2 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் எந்திரங்களை கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக, 870 பவர் டில்லர்களும், 860 ரோட்டவேட்டர்களும் 50 சதவீத மானியத்தில் வினியோகிப்பதற்காக, 11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன்வந்தால், 90 சதவீத மானியம் வழங்கப்படும். டெல்டா பகுதிகளில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் நிறுவுவதற்காக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் எந்திரங்கள்

மின் இணைப்பு கிடைக்க பெறாத டெல்டா விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 ஆயிரம் டீசல் என்ஜின்கள், 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்குவதற்காக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

இத்தகைய வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு, இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள உழவன் கைபேசி செயலி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன்.

நடவு எந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு எந்திர நடவு மேற்கொள்ள, 100 சதவீத மானிய உதவித் தொகை வழங்கப்படும். இதற் காக தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 40,000 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்ட கலவை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், 30 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு முழு மானியமாக 600 ரூபாய் வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தெளிப்பு நீர் பாசனம்

குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக லாபம் தரக்கூடிய பயிறு வகைப்பயிர்களை 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 60 சதவீத மானியத்தில் தரமான விதைகள், 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்கள், பயிறு நுண்ணூட்ட கலவை மற்றும் இலை வழி டி.ஏ.பி. உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பயிறு வகைகளில், சிக்கனமாக பாசன நீரை பயன்படுத்தும் வகையில், 2000 தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குவதற்காக ஒரு கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவிரி டெல்டா மற்றும் கல்லணை பாசனத்தின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் உர பயிர் சாகுபடி 15,000 ஏக்கரில் மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 1,200 ரூபாய் மானியத்தில் பசுந்தாளுர பயிர் விதைகள் வினியோகிக் கப்படும்.

பண்ணை குட்டைகள்

டெல்டா மாவட்ட விவசாயிகள், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், 4 அங்குல விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளத்தில் 30 பி.வி.சி. குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 1,500 அலகுகளுக்கு மானியம் வழங்குவதற்காக, 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வாய்க்கால்களை தூர்வாருதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு குழி எடுத்து நடவு செய்தல், உரக்குழி அமைத்தல் போன்ற பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் மண் வரப்புகளை அமைத்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்கு டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அரசு, 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ரூ.115 கோடி

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, 115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் மற்றும் பயிறு சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை உடனடியாக துவக்குவதற்கு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு குறுவை சாகுபடியினை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை பெறுவதற்கு இந்த அரசு துரித தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும், விரைவில் காவிரி நீர் மூலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story