துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்-துணை தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்-துணை தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 9:05 PM GMT (Updated: 9 Jun 2018 9:05 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் வெடித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு அப்போது தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராக இருந்த சந்திரன், தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தாராக இருந்த சேகர் (தேர்தல்), மண்டல துணை தாசில்தாராக இருந்த கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தாசில்தார் சந்திரன் தூத்துக்குடி நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், சேகர் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தாராகவும், கண்ணன் கயத்தாறு மண்டல துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பாதுகாப்பு

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார் மற்றும் 2 துணை தாசில்தார்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story