சமூக வலைத்தளத்தில் படத்துடன் அவதூறு: பெண் டாக்டர் தூக்கமாத்திரை தின்று தற்கொலை முயற்சி


சமூக வலைத்தளத்தில் படத்துடன் அவதூறு: பெண் டாக்டர் தூக்கமாத்திரை தின்று தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Jun 2018 10:50 PM GMT (Updated: 9 Jun 2018 10:50 PM GMT)

சமூக வலைத்தளத்தில் தனது படத்துடன் அவதூறு பரப்பியதால் மனவேதனை அடைந்த அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவர், தனது மனைவியின் கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் பவானிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயக்குமார், பெண் டாக்டர் பவானியை தனது செல்போனில் படம் பிடித்து, அதனை முகநூல், ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து டாக்டர் பவானி கொடுத்த புகாரின் பேரில் விஜயக்குமாரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த 7-ந்தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

டாக்டர் தற்கொலைக்கு முயற்சி

இந்த சம்பவத்தினால் பெண் டாக்டர் பவானி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் கணவர் சூரியபிரகாசுடன் வசித்து வந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் நீடிப்பு

முன்னதாக நேற்று காலை திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்த மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவமனை டீன் நடராஜன் மற்றும் முதுநிலை டாக்டர்கள் முன்னிலையில் பவானியின் கணவர் டாக்டர் சூரியபிரகாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து மருத்துவ கல்வியின் இயக்குனர், போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் டாக்டர்கள் போராட்டம் நீடிக்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

Next Story