மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவோம் வைகோ உறுதி


மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவோம் வைகோ உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2018 9:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:59 PM GMT)

மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவோம் என்று ம.தி.மு.க. சார்பில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் வைகோ பேசினார்.

சென்னை,

ம.தி.மு.க. சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் இளவரசு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இதுவரை நான் அரசியல் பேசியது இல்லை. இப்போது பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். தமிழகத்தில் ஒரு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சங்பரிவார், இந்துத்துவா அமைப்புகள் ஆயத்தமாகி வருகின்றன.

என்ன தான் அண்ணன் -தம்பி சண்டை என்றாலும் கொள்கைக்கு ஆபத்து வரும்போது பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. எனவே தமிழகத்தில் மதவாத சக்திகளை ஒழித்து, திராவிட கட்சியை பாதுகாக்க வேண்டும். தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி, மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கியே தீருவோம் என்பதில் திண்ணமாக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story