தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 10 Jun 2018 9:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:04 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல்துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள்; பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு கட்டமாகவே மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடம் இருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத்தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story