சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்


சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 10:18 PM GMT)

சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக கடந்த மாதம் (மே) 29-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. இதுவரை 9 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், 10-வது நாள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியாக, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மேலும், நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை, பொதுப் பணித்துறையைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

வரும் 26-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story