புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 15 நாட்கள் பயிற்சி


புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 15 நாட்கள் பயிற்சி
x
தினத்தந்தி 13 Jun 2018 11:49 PM GMT (Updated: 13 Jun 2018 11:49 PM GMT)

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் முதன்மை கல்வி அலுவலகம் வாடகைக்கு இருந்து வந்தது. அந்த அலுவலகம் எழும்பூர் மாநில மகளிர் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முதன்மை கல்வி அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், மத்திய இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட பலர் கலந்துகொண்டனர். சென்னை முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 4 வகுப்பறைகள் நிரந்தர முதன்மை கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மொழித்தேர்வுகள் இதுவரை 2 தேர்வாக நடைபெற்றது. இப்போது ஒரே தேர்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர்.

விரைவில் சி.ஏ. பயிற்சி தொடங்கப்படும். திறன் பயிற்சி புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து அடுத்த மாதம் (ஜூலை) 15 நாட்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story