ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கருத்து: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான மனு தள்ளுபடி


ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கருத்து: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Jun 2018 11:58 PM GMT (Updated: 13 Jun 2018 11:58 PM GMT)

ஓசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என குற்றம்சாட்டி இருந்தார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் போலீசில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுதொடர்பாக மனுதாரர் சம்பந்தப்பட்ட ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story