சட்டசபையில் இருந்து தி.மு.க. 2 முறை வெளிநடப்பு


சட்டசபையில் இருந்து தி.மு.க. 2 முறை வெளிநடப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 8:23 PM GMT (Updated: 14 Jun 2018 8:23 PM GMT)

சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது சட்டசபையில் இருந்து 2 முறை தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

சென்னை,

சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் மாசிலாமணி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு.

மாசிலாமணி(தி.மு.க.):- சுகாதாரத்துறையை மக்கள் நல்வாழ்வு துறையாக மாற்றியவர் கருணாநிதி. தி.மு.க. ஆட்சியில் இந்த துறை மிகச்சிறப்பாக செயல்பட்டது. குழந்தை பெற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் நெய், பேரீச்சம் பழம், மாவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் விரைவில் கெட்டு போய் விடும். இதை நீங்கள் எப்படி பாதுகாப்பாக வழங்குவீர்கள். மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை கடைசியில் கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இது நமக்கு பெருமையா?.

அமைச்சர் விஜயபாஸ்கர்:-பணக்காரர்களை போல ஏழை தாய்மார்களும் நல்ல ஊட்ட சத்து உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாய்-சேய் நல பெட்டகத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய்மாமன் சீர் கொடுக்கும் முன்னே இந்த அரசு குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கிறது.

மாசிலாமணி:-கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. எனவே மீண்டும் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மழை வந்தாலே, கொசுக்கள் வந்துவிடுகிறது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்:-மழை வேண்டும் என்கிறீர்களா? வேண்டாம் என்கிறீர்களா?.

மாசிலாமணி:-மழை வேண்டும், கொசுக்கள் வேண்டாம்...

தொடர்ந்து பேசிய உறுப்பினர் மாசிலாமணி தன்னுடைய உரையை முடிக்கும் போது, திருக்குறள் ஒன்றை வாசித்தார். அவர் வாசித்த திருக்குறள் ஆட்சி குறித்து இருந்ததால் அந்த திருக்குறளுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த திருக்குறளின் பொருள் மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின்:-ஒவ்வொரு முறையும் சட்ட மன்றம் தொடங்கும் போது திருக்குறளை வாசித்துவிட்டு, அதற்கான பொருளை சொல்லித்தான் சட்டமன்றத்தை நீங்கள் துவங்கி வைக்கிறீர்கள். ஆகவே, அந்த பொருளைத்தான் எங்களுடைய உறுப்பினர் இந்த அவையிலே பேசி இருக்கிறாரே தவிர, வேறு எதும் உள்நோக்கத்தோடு பேசவில்லை. எனவே, அந்த சொற்களை நீங்கள் எடுத்திருக்கக்கூடிய காரணத்தால். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் அவமானம் ஏற்படுத்தியதாக கருதி நாங்கள் இதை கண்டித்து இப்பொழுது வெளி நடப்பு செய்கிறோம். இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சட்டசபையில் நேற்று நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், இறுதியாக தி.மு.க. உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி தொகுதி) பேசினார். அவர் தனது பேச்சை முடித்த நேரத்தில், தி.மு.க. கொறடா சக்கரபாணி எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். அவருக்கு சபாநாயகர் பேச அனுமதி அளித்தார்.

அப்போது, குட்கா வழக்கை பற்றி பேச அவர் முயன்றார். அதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். உடனே, அமைச்சர் விஜயபாஸ்கரின் பதில் உரையை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக சொல்லிவிட்டு, 2-வது முறையாக அவையை விட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினார்கள். அந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story